புதுக் காதலர் அவர்கள். இளங்காதல் தரும் இனிய அவஸ்தைகளை அனுபவித்து கொண்டிருந்தனர். கல்லூரி நேரம் தவிர்த்து மற்ற நேரம் அவர்கள் சந்தித்து கொள்ளக்கூடிய சந்தர்பங்கள் சில, அவர்கள் உருவாக்கிய சந்தர்பங்கள் பல. இதற்கிடையே ஒரு நாள், ஒரு வெள்ளிக்கிழமை மாலை அவளை சந்திக்க அவள் வீட்டுக்கே சென்று விட்டான். சற்று பதறித்தான் போய் விட்டிருந்தாள். வீட்டில் பெற்றோர் மத்தியில் பல முறை சந்தித்திருந்தாலும், காதலராய் பார்வை பரிமாற்றம் அங்கு நிகழ்ந்தது அதுவே முதல் முறை. ஹாலில் அவனை அமர்த்தி, புன் சிரிப்பை உதிர்த்துவிட்டு, யாரும் பார்க்காத வண்ணம் நாணி, கன்னத்தில் வண்ணம் கொண்டாள். அன்று 51 ஆவது முறையாக அவள் மேல் காதலில் விழுந்தான் அவன். இதோ டீ எடுத்து வருகிறேன் என்று சொல்லி சமையலறையை நோக்கி நகர்ந்த அம்மாவுக்கு பின்னால் இவளும் நடந்தாள் (அம்மாவுக்கு உதவுகிராளாம்!). அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த டீ யோடு சேர்ந்து இவள் உடலும் சூடேறியது. காதல் தந்த பதற்றமாக இருக்க வேண்டும், அவ்வபோது அம்மா பார்க்காமல் அவனை பார்த்து ஒரு நாணச் சிரிப்பினை உதிர்த்தாள். அவன் பார்வையை சமையலறை வாயிலின் மீது ஒட்டி வைத்தபடி அமர்ந்திருந்தான். கையில் தேநீர் கோப்பையோடு வீட்டு உடையில், நாணமும் புன்னகையும் மட்டுமே அலங்காரமாக அவள் நடந்து வந்த அழகு எண்ணிக்கையை 52 ஆக உயர்த்தியது. தன் வாழ்வின் இனிய 2௦ நிமிடன்களில் லயித்திருந்தவன் கோப்பை பட்டதில் சுய நினைவுக்கு திரும்பினான். சக்கரை கலக்காத தேநீரை, அந்த தருணத்தின் இனிமையோடு சேர்த்து பருகிய வாறு அவளை நோக்கினான், அவள் கோப்பையை நோக்கினாள்!